காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 97 புள்ளி 13 அடியாக உள்ளதாகவும், நீர் திறக்கப்படுவதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 5 புள்ளி 21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.