"அக்டோபர் மாதம் முதல் இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து" அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார். 

இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன் சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் கடலுக்குள் சென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் .

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேச துறைமுகத்திற்கு கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் வரும் 2 ம் தேதிக்குள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் ஒன்றிய அரசு அனுமதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க கப்பல் போக்குவரத்தால் இலங்கை மற்றும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெறுவதுடன் இரு நாட்டிற்கு இடையே நல்லுறவு ஏற்படும் என கூறினார். ஆய்வின் போது நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன், தட்கோ தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து;