நெய்வேலி என்எல்சியில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்கக்கோரி அப்ரண்டிஸ் படித்த மாணவர்கள் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஐடிஐ முடித்த மாணவர்கள் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து 25 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு வேலை வழங்க வில்லை. அவர்கள் பலமுறை என்எல்சி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் அவர்களுக்கு இதுவரை வேலை வழங்கவில்லை.
அதனால் என்எல்சி நிறுவனம் அப்ரண்டீஸ் முடித்த மாணவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கோரியும், கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு சம்பந்தமாக என்எல்சி நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும்,
என்எல்சி நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகள் பணி ஓய்வு பெற்றவர்களில் எங்களுக்கான காலிப் பணியிடங்களை எங்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த மாணவர்கள் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.