“அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே என்மீது அவதூறு பரப்பப்படுகிறது” - அமைச்சர் செல்லூர் ராஜு

“அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே என்மீது அவதூறு பரப்பப்படுகிறது” - அமைச்சர் செல்லூர் ராஜு

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  தன் மீது தவறான செய்தி பரப்பப்படுவதாக சென்னையில் உள்ள தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் உட்பட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

நெல்லை மாவட்டம் பணங்குடியைச் சேர்ந்த நவமணி வேதமாணிக்கம் என்பவர் கடந்த 1997 ஆம் ஆண்டு சொந்தமாக அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்ததாகவும், இந்த  நிலையில் கடந்த 2007 -ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும்
கடந்த அதிமுக ஆட்சியில் பணியாளர் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குவதற்கான டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அப்போது
கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, கட்சி வளர்ச்சி நிதிக்காக பணம் கேட்டதற்கு கொடுக்காததால், டெண்டரை வேறொரு நபருக்கு கொடுத்த நிலையில் தன் நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டு தற்போது சென்னையில் கால் டாக்சி ஓட்டிவருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. 

இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பிய அந்த நபர் மீதும், சில தனியார் தொலைக்காட்சிகள், ஒரு செய்தித்தாள் நிறுவனம் மற்றும் சில சமூக ஊடகங்கள் என  7 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.

பின்னர் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-

"தனிப்பட்ட வாழ்க்கையை களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு ஊடகத்திலும், பத்திரிகையிலும் வந்துள்ளது.  அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர் தெருவுக்கு கொண்டு வந்தது போல் தலைப்பை போட்டு என்னுடைய 40 ஆண்டு கால  பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக என் நேர்மையை கெடுக்கும் வகையில் நான் பணியாற்றிய நிகழ்வை எல்லாம் கொச்சை படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளது.

இது என் உள்ளத்தை மிகவும் பாதித்தது. என் குடும்பத்தில் மிகப்பெரிய மன உளைச்சலும் ஆனது.  என் நண்பர்கள், கட்சி தலைவர்கள், எங்கள் தலைமையில் இருக்கின்ற பொதுச் செயலாளரே பதிலை கொடுக்க வேண்டும் என்று சொல்லும் வகையில் செய்தியின் வலிமை இருந்தது.

என்னுடைய நேர்மையையும், நாணயத்தையும் வேறொருவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.கூட்டுறவுத் துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்வதாக இருந்தாலும் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தான் கணினி கொள்முதல் செய்ய முடிவெடுப்பார்கள். துறை அமைச்சர்களை கேட்டு செய்ய மாட்டார்கள். நான் கணினி நிபுணரும் இல்லை என எல்லோருக்கும் தெரியும்.

சம்பந்தம் இல்லாமல் குறை சொல்லும் வகையில் பேட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கணினி மென்பொருள் டெண்டரை வேறொரு நபருக்கு கொடுத்ததாக தான் குற்றம் சொல்கிறார். அது முழுக்க முழுக்க தவறு. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என அனைத்திலும் கணினி மயமாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்லவில்லை. தற்போது தேர்தல் வருகின்ற நேரத்தில் இதுபோன்ற செய்திகள் வருவதாக பின்புலம் இருப்பது போல் தோன்றுகிறது", என்றார்.

இதையும் படிக்க   |  காலை சிற்றுண்டி திட்டம்; தமிழ்நாடு அரசு விளக்கம்..!