50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனாக, தமிழகத்திற்கு 3,500 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதென நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் - தமிழ்நாடு நிதியமைச்சர் சந்திப்பு:
ஜிஎஸ்டி கவுன்சில் விதிகள்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்பட்ட வேண்டும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது செப்டம்பர் மாதம் ஆகியும் இதுவரை நடைபெறாமல் உள்ளது. இதனை உடனடியாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
மெட்ரோ ரயில் 2வது கட்டத்திற்கான கடன் கேட்பு:
இந்த நிலையில் மத்திய அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் திட்டங்கள், குறிப்பாக மெட்ரோ ரயில் 2வது கட்டத்திற்கான கடன்களை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை வழங்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
50 ஆண்டு வட்டியில்லா கடன்:
அதோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு லட்சம் கோடி வரை 50 ஆண்டு வட்டியில்லா கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தின் பல துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் செய்யப்பட்டு இருந்தது. இதுவரைக்கும் நிதி எதுவும் வராத நிலையில் நேற்று 3,500 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை விடுவித்துள்ளனர். அதன்படி ஆப்டிக்கல் பைபர் கேபிள் திட்டத்துக்கு ரூ.194 கோடி, ஊரக நெடுஞ்சாலை துறைக்கு ரூ.3,263 கோடி எனவும் இதுமட்டுமின்றி பிற திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வருமானவரித்துறை குறித்த தரவுகள் கேட்டு கோரிக்கை:
அதேபோல், கர்நாடகாவிற்கு வருமானவரித்துறை குறித்த தரவுகள் வழங்கப்பட்டது போல, தமிழகத்திற்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.