விநாயகர் சதுர்த்தியையொட்டி மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்- தொற்று பரவும் அபாயம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்- தொற்று பரவும் அபாயம்

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த கடற்கரை ஆனது கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையில் மெரினாவில் சமூக இடைவெளியின்றி பல ஆயிரக்கணக்கானோர் கூடியதால் நோய் தொற்று மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை கருதியது.

பொதுமக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கடற்கரை பகுதி முழுவதும் சூழ்ந்து இருந்ததால் முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் வெள்ளம் போல் குவிந்தனர். கொரோனா தொற்று 3ஆம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கடற்கரையில் குவிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் எவ்வித விழிப்புணர்வும் இன்றி கடலில் இறங்கி குளித்து வருவதை தடுக்க முடியாமல் போலீசார் திணறியனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.