திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த கொடிக்கம்பங்களை அகற்ற சென்றபோது, கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆக்கிரமிப்பில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள மேலப்பட்டி கிராமத்தில், நீரோடை பகுதியில் ஆக்கிரமித்து கட்சி கொடி கம்பங்கள் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கொடிக் கம்பம் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் தீபா வீட்டு வாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ளதால், அதனை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ,வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அங்கு சென்றபோது , விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மற்றும் சில அமைப்புகளை சார்ந்தோர் 200 - க்கும் மேற்பட்டோர் அவர்களை முற்றுகையிட்டனர்.
காவல் துறை துணை கண்காணிப்பாளர் இலக்கியா, வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியல் செய்ததுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அங்கு தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த கொடி கம்பங்களை அகற்றியதோடு மட்டுமல்லாமல் அதன் அருகாமையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களையும் அகற்றினர்.
இதில் கல்வீசி தாக்கியதாக கூறப்படுபவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் வழங்கிய கமலஹாசன்!