நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களாகவே சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அவர் என்ன கூறினாலும் அது பெரும் விவாதமாக்கப்படுகிறது. சீமான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பி டீம் என்ற கருத்து நீண்ட நாட்களாகவே நிலவி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் அண்மைக்கால பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றார். பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
சீமான் சொல்வது சரி தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல அமைய நெட்டிசன்கள் சீமானை கடுமையாக கண்டிக்க தொடங்கி விட்டனர். இச்சூழலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சைவம் மதத்திற்கு திரும்ப வேண்டும் என சீமான் கருத்து தெரிவிக்க அவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்தான் என உறுதி படுத்திவிட்டார்கள். ஏனென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பாஜகவினரும் இப்படி தான் மதம் மாற சொல்கிறார்கள்; அதே கருத்தை தான் சீமானும் முன்வைக்கிறார். அப்போது அவர்களுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு என்ன என பல அரசியல் கேள்வியெழுப்பி உள்ளனர்..
இச்சூழலில் சீமானை பாஜகவின் ஊதுகுழல் என சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமான் பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார். தமிழா, திராவிடமா எனும் விவாதத்தை எழுப்பிய போதும் சரி 100 நாள் வேலை திட்டம் குறித்து கூறியதும் சரி இவை எல்லாம் மத்திய அரசின் செயல்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கும் செயல் தான் என கூறினார். . ஊழல் செய்பவர்கள் நிச்சயம் தண்டனைக்குரியவர்கள், மேலும் அதிமுக ஆட்சியிலேயே சில அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆகவே திமுக அரசு செய்வதில் எந்த தவறும் இல்லை என்றும் தவறு செய்தால் தண்டனை அனுபவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.