"எங்கள் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது" டி.டி.வி பெருமிதம்!

"எங்கள் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது" டி.டி.வி பெருமிதம்!

ஓ.பன்னீர் செல்வத்துடனான இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ஆட்சி அதிகாரத்திற்காக அ.ம.மு.க., தொடங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் லட்சியங்கள், மக்கள் நலக்கொள்கைகளை தமிழத்தில் நிலைநாட்டாவும், மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து கிடைத்திடவும் தொடங்கப்பட்டது எனக் கூறினார்.

மேலும், ஆறு ஆண்டுகள் சோதனைகளையும், தேர்தல் தோல்விகளையும் தாண்டி இன்னும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் தன்னுடன் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கும், இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகள் கையில் உள்ள இயக்கத்தை மீட்டு எடுப்பதற்காகவும் தன்னுடன், ஓ.பி.எஸ். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கைகோர்த்துள்ளனர் என தெரிவித்தார். 

தொடர்ந்து, இந்த இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா அலங்கரித்த தலைவர் பதவியை களேபரம் செய்து விட்டார்கள் என்றும் அவர்களிடம் இருந்து அதை மீட்டெடுக்க தான், அவரும் ஓ. பன்னீர்செல்வமும்  இணைந்து இருப்பதாக தெரிவித்தார். ஜாதி,மதங்களுக்கும், பகுதிகளுக்கும் அப்பாற்பட்டு, தமிழக மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டு இதன் வெளிப்பாடு வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முழுவதும் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தின் முடிவில் டிடிவி தினகரனுக்கு போர்வாள் மற்றும் செங்கோல் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com