பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கட்டாயபடுத்த கூடாது என மத்திய அரசு அறுவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட வயதை கடந்த மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதனை எதிர்த்து அறம் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேவசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தாத நிலையிலும், சிலர் இயற்கை மருத்துவத்தை நாடும் நிலையிலும் தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும், சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பபடாத ஆசிரியர்கள், மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.