டெல்டா வகை மற்றும் ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள் பங்கேற்பு. சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், பூஜ்யம் நோக்கி தொற்று நகர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இன்னும் அதிகமாகும் என அச்சம் உள்ளது என்றார்.
மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு கவனிப்பு மையம் அமைக்கப்படும். கடந்த மே, ஜூன் மாதம் எங்கு எல்லாம் கொரோனா சிறப்பு மையம் இருந்ததோ, அங்கேல்லாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைன் போக வேண்டிய அவசியம் இல்லை. நாமே மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம். என கூறிய அவர், ஓமைக்ரான், டெல்டா என எந்த வகை கொரோனாவாக இருந்தாலும் ஒரே மாதிரியான சிகிச்சை தான் அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.