திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் இடம் உரிய பராமரிப்பு இல்லாததால் நோய் பரப்பும் இடமாக மாறி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி பூங்கா எதிரில் திருப்பதி திருமலை திருக்கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் உள்ளது.
தடுப்புச் சுவர் கூட இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது, சிறுநீர் கழிப்பது என அந்த இடத்தையே குப்பை மேடாக்கி வைத்துள்ளனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாக பகுதி குடியிருப்பு மக்கள் கூறுகின்றனர்.
குப்பைகள் உள்ள இடத்தில் பன்றிகள், நாய்கள், அதிகம் இருப்பதால் நோய்த் தொற்று விரைவாக பரவி விடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். திருப்பதி திருமலை தேவஸ்தானம் அந்த இடத்திற்கு சுற்றுச் சுவராவது கட்ட வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகமாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.