மகளிர் உரிமைத் தொகை திட்டம்; பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் திராவிட மாடல் ஆட்சியின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் . 

தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வேலைகள் ஆரம்பமானது. இதன் ஒரு அங்கமாக மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தன் இலக்கை எட்டியுள்ளது. 

உரிமைத் தொகை யார் யாருக்கெல்லம் கிடைக்கும்? என வரையறை செய்யப்பட்டு பின்னர் அதில் இருந்து ஒரு கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த மகளிர் உரிமைத் தொகைக்கு மட்டும் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பெருமிதம் தெரிவித்தார். 

இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான இன்று அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடக்கும் அரசு விழாவில் இந்த பொன்னான திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று காலை முதலே மகளிருக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் என பெயரிடப்பட்ட இந்த திட்டம் எந்த நிலையிலும் விமர்சனங்களை பெற்று விடக்கூடாது என முழு முனைப்போடு இயங்கி வருகிறது தமிழக அரசு. 

உரிமைத் தொகையை தேடி எந்த நபரிடமும் கரம் நீட்டி நிற்கும் நிலை உண்டாகி விடக்கூடாது என்பதற்காகவே அவரவர் வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு இந்த பணத்தை எடுப்பதற்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளும் அளிக்கப்பட்டுள்ளது. மாதாமாதம் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததை பயனாளிகள் தங்கள் செல்போன் மூலம் அறிந்து கொள்ளலாம், 

அருகில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் சென்று தங்களுக்கான உரிமைத் தொகையை எடுத்த பெண்கள் இனி தலைநிமிர்ந்து சொல்லலாம்.. என் பணம், என் உரிமை இதுதானே சமூகநீதி.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com