திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் புதிய டி.எஸ்.பி யாக கோவை மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வி கே புரம் ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்காக ஆஜரான இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது.
இளைஞர்களின் பற்களை பிடுங்கி விவகாரம் தொடர்பாக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக கோவை மாநகர உதவி காவல் ஆணையராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார். ஓரிரு நாளில் இவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.