உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது தி.மு.க. ... விடிய விடிய நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு....

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. விடிய விடிய நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது தி.மு.க. ... விடிய விடிய நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு....

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. 138 மாவட்ட கவுன்சிலர், ஆயிரத்து 375 ஒன்றிய கவுன்சிலர், இரண்டாயிரத்து 779 கிராம ஊராட்சி தலைவர், 19 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா மூலம், கண்காணித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.  இதில் இரண்டாயிரத்து 874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதில், 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக இருந்த மொத்தம் 153 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.ஆயிரத்து 421 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் சுமார் 530-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 92 இடங்களிலும், பாமக 27 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 48 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 99 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 5  இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 457 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது . 78 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com