தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்து வருகிறாா் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொிவித்துள்ளாா்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கடன் தள்ளுபடி அட்டைகளை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியின்படி, விருதுநகா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு 33 கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தொிவித்தவர், மீண்டும் புதிதாக 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மாதந்தோறும் மகளிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சரால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறியவர், தகராறு செய்ததால் தான் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை தொடா்ந்து விமா்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.