இந்திய காலாட்படை தினத்தையொட்டி வெலிங்டன் இராணுவ மைய வளாகத்தில் உள்ள போர் நினைவுத் தூண் தேசிய கொடி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலாட்படை தினம்
ஸ்ரீ நகரில் இந்திய இராணுவத்தின் முதல் காலாட்படை பட்டாலியன் தரையிரங்கியதை நினைவுக் கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ந் தேதி காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவம் ஜம்மு காஷ்மீரை கைப்பற்றுவதை தடுப்பதில் இந்த காலாட்படை பிரிவு மிக முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வெலிங்டன் இராணுவ மையத்தில் உள்ள போர் நினைவுத் தூணில் ஆண்டு தோறும் சிறப்பாக நினைவு கூறப்பட்டு வருகிறது.
போர்களின் ராணி
நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் விரேந்திர வட்ஸ், காலாட்படை என்பது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் அரண். போர்களின் ராணி என்றும், இந்தியாவின் முதுகெலும்பு என புகழாரம் சூட்டினார். காலாட்படை தினத்தையொட்டி ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல். விரேந்திர வட்ஸ், வெலிங்டன் ராணுவ மைய கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ், தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இந்திய இராணுவத்தின் துணிச்சலான வாழ்க்கையின் மிக உயர்ந்த தியாகத்தை செய்த காலாட்படை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.