"பாதை அமைத்து தராத அரசுக்கு நன்றி" பதாகை வைத்த சிறுவன்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இனியவன் தற்போது 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இவரது வீட்டிலிருந்து சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள அன்னதானக் காவேரி என்ற காட்டாற்று வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

அப்போதிலிருந்து சாலைக்குச் செல்ல வசதி இல்லாமல் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் 10 அடிக்கும் மேலான ஆழமுள்ள வாய்க்காலில் இறங்கி ஏறி சாலைக்கு சென்று வந்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவன் இனியன் மற்றும் அவரது தந்தை செல்வம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி மழை பெய்து வருவதால், வாய்க்காலில் இறங்கி ஏறவும், வாய்க்காலின் கரையிலும் செல்வதால் மண் சரிவுறுவதோடு, நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக இருப்பதாகக் கூறி சீலை அமைத்துத் தரும் வரை தான் பள்ளிக்கு செல்லப் போவதில்லை எனக் கூறி மாணவன் இன்று  பள்ளிக்குச் செல்லவில்லை.

மேலும், வீட்டின் முகப்புப் பக்கத்தில் வாய்க்கால் கரையில் சாலை எடுத்து தராமல் இருந்த அதிகாரிகளுக்கு நன்றி எனவும், சாலை இல்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை எனவும் கூறி மாணவனின் புகைப்படத்தோடு வைக்கப்பட்டுள்ள பதாகையால் கீரமங்கலம் பகுதியிலு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.