சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி வேலுமணி மீதான இரண்டு வழக்குகளின் தீர்ப்பு வந்துள்ள நிலையில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையிலும் கோவையிலும் மாநகராட்சியில் வழங்கப்பட்ட டென்டர்களில் முறைகேடாக டெண்டர்கள் வழங்கப்பட்டதாக வழக்கு என்றும் இந்த வழக்கு தொடர்பாக அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு ஒரு புகார் மனுவை கொடுத்தது. அதை தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ் பாரதி மற்றொரு மனுவை கொடுத்தார், அதன் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பிரிலிமினரி என்கொயரி நீதிமன்றத்தில் நடைபெற்றது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் அதில் எஸ்.பி வேலுமணி குற்றம் அற்றவர் என்று ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்டு அவர் குற்றம் அற்றவர் என்று வழக்கு கைவிடப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு வந்ததும் அதில் குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளது என்று கூறி பொய்யாக அறிக்கை அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு தொடரப்பட்டது, அது தவறு என்று நாங்கள் வாதிட்டோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாங்கள் அளித்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது தொடரப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கு என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் பொய்யான புகாரை திமுக அரசு செய்கிறது அதிமுக மீது அடக்கு முறையை ஏவி விட வேண்டும் என்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் புலன் ஆகிறது என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சொத்து குவிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது, அதில் வேலுமணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் டெண்டர் முறைகேடு வழக்கு பொய்யான வழக்கு என்று உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக என்னுடைய மனுதாரரையும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையும் பெற்று அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறிய அவர் திமுக அரசு அதிமுகவினரை பழிவாங்குவதாக ஓங்கி அறைந்து இந்த தீர்ப்பின் மூலம் உண்மையை சொல்லி உள்ளது என்று கூறினார்.