வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. கொமிலா என்னும் பகுதியில் தொடர்ந்து இந்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. புகழ்பெற்ற இஸ்கான் கோவில் உள்பட பல இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வங்க தேசத்தில் பதற்றம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் ரங்க்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்து இளைஞர், சமூக வலைதளத்தில் அவதுாறு செய்தி வெளியிட்டதாக வதந்தி பரவியது.
இதை தொடர்ந்து நேற்றிரவு தலைநகர் டாக்காவிலிருந்து 255 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமத்தில் இந்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன. இதில் 20 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் 66 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் அப்பகுதி பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.