சர்ச்சைப்பேச்சுக்கும், சலசலப்புக்கும் பேர் போனவர் பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா. கடந்த 2018ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள மசூதி அருகில் விநாயகர் சிலை வைக்க மேடை அமைக்க போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில், தடையை மீறி அந்த இடத்தில் பாஜக மேடை அமைக்க முயற்சித்தது. அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எச்.ராஜா. வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது, எச்.ராஜா உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பேசிய அந்த வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.