சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 05 -ம் தேதி முதல் பிப்ரவரி 02- ம் தேதி வரை 3,499 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19,26,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
14 வகையான பிளாஸ்டிக்
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுபடுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும்,தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 05-ம் தேதி முதல் பிப்ரவரி 02- ம் தேதி வரை மாநகராட்சி அலுவலர்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 20,123 இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் 5,409 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3498.81 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19,26,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்
வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.