வாரிசு சான்றிதழ் வழங்க 8,000 லஞ்சம்; ஆர்.ஐ. கைது!

வாரிசு சான்றிதழ் வழங்க 8,000 லஞ்சம்; ஆர்.ஐ. கைது!

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ 8000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, காவேரியம்மாபட்டியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது தந்தை வேலுச்சாமிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு சான்றிதழ் வழங்க வருவாய்  ஆய்வாளர்  பாண்டியன் ரூபாய் 8000 லஞ்சமாக கேட்டுள்ளார். அதனால் காவேரியம்மாபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று ரசாயணம் தடவிய ரூ.8,000 பணத்தை அவரிடம்  காலை கொடுத்துள்ளனர்.

அதை வாங்கிய மாரிமுத்து ஒட்டன்சத்திரம் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று ஆய்வாளர் பாண்டியனிடம் ரசாயணம் தடவிய ரூ.8,000 லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது தயாராக காத்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு  டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் வருவாய் ஆய்வாளர் பாண்டியனை கைது செய்து விசாரணை செய்தனர். அதன் பின் அவரை கைது செய்து திண்டுக்கல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிக்க:காதல் விவகாரத்தில் இளைஞா் உயிரிழப்பு; 8 போ் கைது!