
திமுக ஆட்சிக்கு வந்தபோது மிகவும் மோசமான நிதிநெருக்கடி இருந்தபோதிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனக்கு முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாதுரை எனவும், மே 7ம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன் என்றும், இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக தான் ஆளவேண்டும் என மக்கள் எண்ணும் வகையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது நிதி நெருக்கடி மிகவும் மோசமானதாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு வருவாய் பற்றாக்குறை ரூ.30ஆயிரம் கோடியாக குறைக்கப் பட்டுள்ளதாகவும், துறைவாரியாக சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
தொடர்ந்து, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து குற்ற செயல்கள் குறைந்து்ளளதாகவும், குற்றவாளி யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காவல்துறை குறித்து பேசும்போது, காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம் என ஒப்புக்கொண்ட முதலமைச்சர் காவல் துறையினரிடையே குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன் என்றும், தவறை திருத்தி கொள்ளும் பண்பை காவல்துறை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், குற்றவாளியை தப்பவிட்டதாகவோ, குற்றவாளியை காப்பாற்றியதாகவோ இதுவரை நடக்கவில்லை என கூறிய அவர், குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என உறுதி கூறுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளதாகவும், குற்றம் நடந்தவுடன் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும், இதனால் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை, முதலீடுகள், நிறுவனங்கள் வருவதோடு, தமிழ்நாடு அமைதியான மாநிலமாக நற்பெயரை பெறுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.