

திடீரென வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் வேலூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் சிறிய அளவிலான மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது. அதில் சிகப்பு நிற மின் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் கிராம மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இது குறித்து குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர், அந்த சிறிய அளவிலான கருவியை கைப்பற்றி அதில் இருந்த விலாசத்திற்கு தொடர்பு கொண்டனர். விசாரணையில் அப்பொருள் மீனம் பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான கருவி என்றும் வானிலை ஆராய்ச்சிக்காக தொடர்ந்து அனுப்பப்படும் கருவி எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த கருவியால், எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும் அந்த கருவியை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குடியாத்தம் நகர போலீசார் அந்த கருவியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இரவில், வானில் இருந்து திடீரென மர்ம பொருள் விழுந்ததை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.