வேகமாக இருசக்கர வாகனம் இயக்குவோருக்கான நடவடிக்கை....! தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!

வேகமாக இருசக்கர வாகனம் இயக்குவோருக்கான நடவடிக்கை....! தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!

சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் இயக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்று வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுனர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதியைப் பெறாமல் வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவது விபத்துக்களுக்கு வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பை மாற்றி, அபாயகரமான வகையில் இயக்குவதை தடுக்கவும், வேகமாக  வாகனங்கள் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி  டி. கிருஷ்ணகுமார் அமர்வு, நான்கு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்க : உ.பி.,யின் வழியில் குஜராத்...காப்பி அடிக்கப்படுகிறதா தேர்தல் வாக்குறுதிகள்!!!