திடீரென உள்வாங்கிய விவசாய நிலம்.... ஆராய்ச்சியில் மூத்த புவியியலாளர்கள்!!

திடீரென உள்வாங்கிய விவசாய நிலம்.... ஆராய்ச்சியில் மூத்த புவியியலாளர்கள்!!

வாணியம்பாடி அருகே மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென உள்வாங்கிய விவசாய நிலத்தில் புவியியல் துறை இயக்குநர் ஹிஜாஸ் பஷீர் தலைமையில் மூத்த புவியியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூவல்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி  முருகேசன்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம்  மலையடிவார பகுதியை ஒட்டி உள்ளது.  அதில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.  வழக்கம் போல கடந்த 20.03.2023ம் தேதி  காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் சென்றுள்ளார்.  அப்போது விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன்  திடீரென 30 அடி ஆழம் மற்றும் 15 அகலத்தில் திடீரென்று  பள்ளம் ஏற்பட்டு விவசாய நிலம் உள்வாங்கியது.  

இதனைக் கண்டு விவசாயி மற்றும் அங்கு விவசாய பணியில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.  தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி யாரும்  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  மேலும் வருவாய் துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் பார்த்த போது மேலும் ஆழம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று சம்பவ இடத்திற்கு இந்திய புவியியல் துறை தமிழ்நாடு கிளையின் இயக்குநர் ஹிஜாஸ் பஷீர் தலைமையில் மூத்த புவியியலாளர்கள் அசரார் அஹமத் மற்றும் ஜெயபால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு மண் மற்றும் பாறை துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.  இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது ஆய்வுக்கு பின்பு தான் முழு தகவல் கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:   திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி....!!