கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிப்பு..!!!

கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிப்பு..!!!

சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை கடன் தொகையாக பார்க்கவில்லை, அவர்களின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக பார்க்கிறோம்

விரைவான நடவடிக்கை:

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு  நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

கடன் தொகை:

இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் ஆறு முறை குழு கூட்டம் நடத்தி சேமிப்பு செய்து கணக்கு புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக் குழுவினரின் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது எனவும் கூறினார்.

அதிகரித்த தொகை:

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி 21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் 2022 - 23 ஆம் நிதி ஆண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 25,219 ஆயிரம் கோடி ரூபாய் சுய உதவி குழுக்களுக்கு கடனனுவி அளித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

நம்பிக்கை தொகை:

மேலும் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள் எனவும் இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.  தொடர்ந்து இந்த சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை அரசும், முதலமைச்சரும் கடன் தொகையாக பார்க்கவில்லை எனவும் சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம் எனவும் பேசினார். 

இதையும் படிக்க:  இடம் ஒதுக்கீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் கே.என்.நேரு!!