மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகாலை நேரங்களில் கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானையின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் இவ்வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வது வழக்கம்.
தற்போது கடந்த மூன்றாண்டு காலமாக 'பாகுபலி' என்று அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும் விவசாய பயிர்களை உண்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தாசம்பாளையம் பெருமாள் கோவில் மண்டபத்தின் முன்பக்க கேட்டை உடைத்த பாகுபலி காட்டு யானை தாசம்பாளையம் கிராமத்திற்குள் சென்ற காட்சி கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது