தி.மு.க. முன்னாள் எம்.பி.டாக்டர் மஸ்தான் வழக்கு... ஜாமீன் மனு இரண்டாவது முறை தள்ளுபடி!!!
தி.மு.க. முன்னாள் எம்.பி.டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் மஸ்தான் கார் டிரைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது தம்பியான கவுஸ் அஷாம் பாஷா கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி கடந்தமுறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கவுஸ் அஷாம் பாஷா ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடிந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கவுஸ் அஷாம் பாஷா சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் வினோத் சொத்துக்காக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனவும் விசாரணை முடிந்த நிலையிலும் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த கவுஸ் அஷாம் பாஷா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: சத்யா ஸ்டூடியோ வழக்கு... தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்...!!