மாத்திரை, ஊசியை விட, இதை குடித்தால் வலி பறக்கும்...அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மது!!

மாத்திரை, ஊசியை விட, இதை குடித்தால் வலி பறக்கும்...அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மது!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒருவர்,  படுக்கையில் வைத்தே மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். அந்த வகையில் பரமக்குடியைச் சேர்ந்த ராஜாக்கனி என்பவர் வழுக்கி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு 2 கால்களிலும் கட்டுப்போட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காயம் குணமடைவதற்காக மருந்துகள் வழங்கி வந்துள்ளனர். ஆனால் மருந்தின் மூலம் தனக்கு வலி போகவில்லை என புலம்பியவர், திடீரென ஒளித்து வைத்த மதுபாட்டிலை எடுத்து அதனை கூல்ட்ரிங்ஸ்-சில் கலந்து குடிக்கத் தொடங்கியுள்ளார்.

இதனை பார்த்த செவிலியர்களும், நோயாளிகளும் வீடியோ எடுத்ததோடு மது அருந்துவது தவறு என கூறியுள்ளனர். அப்போது போதைக்குள்ளான ராஜாக்கனி, தனக்கு மாத்திரையை விட, டாக்டர் போடும் ஊசியை விட, மருத்துவமனையில் ஏற்றும் குளுக்கோஸை விட இந்த குவாட்டரில் தான் அனைத்து வலியும் பறப்பதாக கூறியுள்ளார். 

மருத்துவ மனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவருக்கு மது பாட்டில் எப்படி கிடைத்தது, அவரே கொண்டு வந்தாரா அல்லது இதுபோன்று காயம் பட்ட நோயாளிகள் தங்களது வலியை மறக்க மருத்துவ மனை வளாகத்தில்  மது பாட்டில் விற்பனை செய்யப்படுகிறதா என மருத்துவமனை நிர்வாகம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் சந்தேகப்படும்படி  பலர் மருத்துவமனைக்கு  நோயாளிகளின் உறவினர்கள் என்று கூறி வருபவர்களை  முழுமையான விசாரணை தடத்திய பின்பு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com