விமான நிலையத்தில் தொடர் சோதனை...! கழிவறை குப்பை தொட்டிகளில் கிடந்த தங்கம்...!

விமான நிலையத்தில் தொடர் சோதனை...! கழிவறை குப்பை தொட்டிகளில் கிடந்த தங்கம்...!

துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவருடைய உள்ளாடைகளில் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதோடு மட்டுமின்றி அவர் ஐபோன்களில் பயன்படுத்தும் பேட்டரிகள் எடுத்து வந்திருந்தார். அந்த ஐபோன் பேட்டரிகளுக்குள் தங்கத் தகடுகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து 440 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்களை சோதனை செய்தபோது, உள்ளாடைகள் மற்றும் சூட்கேஸ்களில் தங்க கட்டிகள், அதோடு தங்கத்தை அரைத்து தங்க பவுடர் போன்றவற்றையும் மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் இரண்டு பேரிடம் இருந்தும் 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வருகை பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறைக்குள் உள்ள குப்பை  தொட்டிக்குள் ஒரு சிறிய மின் மோட்டார் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மின் மோட்டாரை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, அதை பிரித்து சோதித்த போது, அதனுள் தங்கத்தகடுகள் மற்றும் தங்க வளையங்கள் போன்றவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து 400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 

தொடர்ந்து, டிராலியில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததுள்ளது. அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து சோதித்தபோது, தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனுள் 350 கிராம் தங்க கட்டிகள் இருந்ததையும் கைப்பற்றினர். அதே பயணிகளிடமிருந்து 38 பழைய மடிகணினிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில், மொத்தம் ரூ.93.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம், மற்றும் 38 மடிகணினிகள் கைப்பற்றப்பட்டு, 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : உலக சிறுவர் வன்கொடுமை தினம்... பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சூடு பற்றி எடுத்துரைத்த காவல் ஆய்வாளர்...