ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; "அதை நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்" ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதில்!.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; "அதை நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்" ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதில்!.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் "அதை நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்" என பதிலளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.  இவர் நேற்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு உயர்ந்த நீதி எதுவென்றால் நம்முடைய வாழ்க்கை சட்டத்தை மட்டுமல்ல தர்மத்தை பொறுத்து அமைந்துள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காசி தமிழ் சங்கமம், செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழின் பெருமையை பாரத தேசம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சிகள் பேருதவி புரிந்துள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலும் இந்தி மொழி பேசப்படுகிறது. உள்ளூர் மொழிகளும் உள்ளன. காசி தமிழ் சங்கமம் மற்றும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் போல ஜார்கண்ட் மாநிலத்துடன் தமிழ்நாடு இணைந்து நிகழ்ச்சி நடத்த எதிர்காலத்தில் திட்டமிடப்படும். தமிழகமும் ஜார்கண்ட்-ம் இணைந்து வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் என்னுடைய கவனம் இருக்கிறது. மருத்துவம், தொழில்துறை மின்சாரத்துறை உள்ளிட்ட பலதுறைகளிலும் இருமாநில ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும். அதற்கான செயல்வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என கூறினார்.

 
தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு நிலவுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுநர் அவர் கடமையைச் செய்கிறார். அதை மற்றவர்கள் வேறொரு கண்கொண்டு பார்ப்பதாக நான் உணர்கிறேன். எனக்குத் தெரிந்தவரையில் தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனில் அதிக அக்கறைக் கொண்டவராக இருக்கிறார். தமிழக அரசு ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், ஆளுநரை அனுசரித்து அவருடைய முழு ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். ஏனெனில் ஆளுநர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என தெரிவித்தார்.
 
பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பத்திரிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் போது பதிலளிக்காமல் செல்ல முடியாது. "அரசியல் பேசக்கூடாது" என அண்ணாமலை கூறியதற்கு அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்  என பதிலளித்தார்.

இதையும் படிக்க | "சிங்கம், சிறுத்தை, புலி, யானைகள் மிகவும் ஆபத்தானவை; ஆனால். அது ஜூராசிக் பார்க்கில் அல்ல" வெளியானது சலார் டீசர்!