அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மனு - அவசர வழக்காக நாளை விசாரனை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மனு -  அவசர வழக்காக நாளை விசாரனை

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

பொதுக்குழு தீர்மானம்   எதிர்த்து மனு

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அதிமுக மற்றும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில்மனுவில் பொதுக்குழு கூட்டப்பட்டு எட்டு மாதங்களுக்கு பிறகு தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்வில் கல் எரிந்த சம்பவம் - 10 வயது சிறுவனிடம் விசாரனை

இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு 

இந்நிலையில் மனோஜ் பாண்டியனை போல தங்களது நீக்கத்தை எதிர்த்து வைத்தியலிங்கம் மற்றும் ஜே.. சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கின் விசாரணை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொது செயலாளர் தேர்தல் -  தடை  அவசர முறையீடு

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமை உருவாக்கியது தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

நாளை அவசர வழக்காக விசாரணை 

இந்த அவசர முறையிட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இந்த அவசர மனுவை  நீதிபதி கே.குமரேஷ் பாபு நாளை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக நாளை காலை 10 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.