பொது இடத்தில் தேவாலயம் கட்டும் பணிகள்: "ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு"!

பொது இடத்தில் தேவாலயம் கட்டும் பணிகள்: "ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு"!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், தமிழக அரசின் அரசாணைக்கும் விரோதமாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள பூந்துறை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உரிய அனுமதிகளைப் பெறாமல், கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுவதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அரசு புறம்போக்கு நிலங்களை மத ரீதியாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு, அரசாணைகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் தமிழ்நாடு அரசின் அரசாணைகளையும் மீறும் வகையில் பூந்துறை கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, எந்த அனுமதியுமின்றி தேவாலயங்கள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நத்தம் புறம்போக்கு நிலத்தை தேவாலயங்கள் கட்ட ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தேவாலயங்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இதுசம்பந்தமாக பதிலளிக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிக்க:"பதவிக்காக எனது கொள்கையும் தத்துவமும் மாறாது" பி.டி.ஆர்