இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர்..... போலி ஆவணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!!

இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர்..... போலி ஆவணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!!
Published on
Updated on
1 min read

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏழு அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் முறையற்ற நியமனங்கள் காரணமாக அரசுக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில், போலி ஆவணங்களைக் கொடுத்து முதல்வராக பதவி உயர்வு பெற்ற மணவாளனுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குனர், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வராக மணவாளன் நீடிப்பது பொது நலனுக்கு எதிரானது என்பதால், அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.  இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு வழக்கறிஞர் பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com