பாஜக பதில் கூற முடியாத கேள்வியை கேட்டதற்காக தான்...ராகுல்காந்தி தகுதி நீக்கம்!

பாஜக பதில் கூற முடியாத கேள்வியை கேட்டதற்காக தான்...ராகுல்காந்தி தகுதி நீக்கம்!

பாஜக பதில் கூற முடியாத கேள்வி ஒன்றை கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், ஜாமீனையும் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, வயநாடு தொகுதியின் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

இந்நிலையில் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வயநாட்டிற்கு ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் இருவரும் பேரணியாக சென்ற நிலையில், வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின் முதன் முதலாக வயநாட்டிற்கு சென்றுள்ளார். இருப்பினும் அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, என்னை சிறையில் அடைக்க முடியும் ஆனால் ஒருபோதும் முடக்க முடியாது என்று தெரிவித்தார். 

அதேபோல், பிரியாகாந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக பதில் கூற முடியாத கேள்வி ஒன்றை கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் உடையணியும் முறையை மாற்றி கொண்டிருக்கிறார். ஆனால், பொதுமக்களின் வாழ்க்கை முறையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.