சூரத் நீதிமன்றம் தீர்ப்பு - நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்!

சூரத் நீதிமன்றம் தீர்ப்பு - நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நாள் ஜனநாயகத்தின் இருண்ட நாள் என்றும், தமிழ்நாடு முழுவதும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்திக்கு எதிரான இந்த தீர்ப்பை கண்டித்து தலைமைச் செயலகம் எதிரே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு ரிப்பன் கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை உண்டு என்றும், மக்களுடைய குரலாக பேசிய ராகுல் காந்திக்கு வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கோபண்ணா, ஆதாரமற்ற அவதூறுகளை கொண்டு  பொய் வழக்கு போட்டு, இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அடக்குமுறைகளை கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சாது என்றும் தெரிவித்தார். இதேபோன்று தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com