அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் டிடிஎப் வாசன் கைது!!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, வாகனத்தை இயக்கியதற்காக, காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல யூட்டுபரும், 2கே கிட்ஸின் ஹீரோவுமான டிடிஎப் வாசன் அவ்வப்போது தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வழக்கமான செயலை நேற்றைய முன்தினமும் செய்துள்ளார்.

வாசன், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் தனது ஹயபுஸா இருசக்கர வாகனத்தில், வீலி (வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு வேகமாக செல்வது) சாகசம் செய்த பொழுது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி, தறிகெட்டு சென்று சாலையின் தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தூக்கிவீசப்பட்டதால், வாசனுக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இதுகுறித்து விசாாித்து டிடிஎப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் காவல்துறையினர்.

இந்நிலையில் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்துறை பரிந்துரை செய்துள்ளது. 

மோட்டார் வாகன சட்டத்தின்படி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், டிடிஎப் வாசனை, காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க || பழைய இரும்பு திருடிய பாஜக கவுன்சிலருக்கு முன் ஜாமின்!!