
கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் படகு சவாரியில் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 பேர் திருரங்கடியில் உள்ள தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனூர் படகு விபத்தில் உரிமையாளர் நாசர் மீது பிணை வழங்கப்படாத பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மலப்புரம் தானூரைச் சேர்ந்த நாசர் மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் நாசர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேரை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.