தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் - மத்திய ரயில்வே அமைச்சர்

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் - மத்திய ரயில்வே அமைச்சர்

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் 13 லட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு 75 ரயில்கள் இயக்கப்படும் போது, நகரங்களுடன் மக்களின் மனங்களும் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு சார்பில் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் சேலத்தில் செளராஷ்ரா தமிழ் சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர்

கலைத்திறன் மிக்கவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஸ்வகர்மா திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம்-குஜராத் இரு மாநில மக்களிடையே கலாசார இணைப்பு பலப்படும். கலை, கலாசாரம், ஜவுளி, வர்த்தகம், கல்வி, சுற்றுலா, ஆன்மீகம் ஆகிய அனைத்து துறைகளிலும் இரு மாநிலங்களின் பொதுமக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் நோக்கத்தை அடையும் வகையில் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
 
நாட்டின் 100-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் போது,  அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்றதாக அமைவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்து வருகிறார். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 75 ரயில்கள் பல்வேறு நகரங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரங்கள் இணைக்கப்படும்போது, அத்துடன் மக்களின் மனங்களும் இயக்கப்படும். இதேபோன்று 75 ரயில் நிலையங்கள் அம்ரித் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் சேலம் சந்திப்பு ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது.


நாட்டின் வளர்ச்சிப் பாதையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்தவித பாரபட்சமும் இன்றி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. சேலம், கரூர், நாமக்கல் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களை  சிறு குறு சங்கங்களுடன் இணைத்து வாழ்க்கைத் தரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 146 பயிற்சி மையங்கள் வாயிலாக 13 லட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் கைத்தறியை மேம்படுத்திட 63 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தரம் உயர்த்திட ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்புடன் கூடிய அடையாள அட்டை 52 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
இந்நிகழ்வில் குஜராத் மாநில கூட்டுறவுத் துறை ஜெகதீஷ் விஸ்வகர்மா, குஜராத் காந்தி நகர் மாவட்ட ஆட்சியர் பிரவீனா, செளராஷ்டிரா தமிழ் சங்கம ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com