வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நிதியை பயன்படுத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நிதியை பயன்படுத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்ற தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தாதது குறித்து விளக்க மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் பரவியுள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்த தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்  கூறி மத்திய  அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பு செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் ஆஜராகியிருந்தனர். 

இதையும் படிக்க : மாணவனை பிரம்பால் அடித்த தற்காலிக ஆசிரியர்... செருப்பால் அடித்து கடுமையாக தாக்கிய உறவினர்கள்...!

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (வழக்கறிஞர்), தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ள 266 பணிகளில் மரங்களை அகற்றும் பணி சேர்க்கப்படவில்லை என்றும், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் செயலாளர் ஆஜராக இயலவில்லை என்றும், இதுசம்பந்தமாக விரிவான மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டச் சட்டத்தில் வன வளர்ப்பு பணிகளுக்கு இந்த நிதியை ஒதுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அன்னிய மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை நட வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல் விளக்கம் தரலாமா எனவும், வனங்களை பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், மத்திய அரசு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விளக்க மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.