சென்னையில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்...!!

சென்னையில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்...!!

மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் அரசு துறைகளில் அனைத்திலும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ்  கூறியுள்ளார். 

சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இமாஜின் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொழில் முனைவோர் திட்டத்தில் தங்களது கண்டுபிடிப்புகளை அமைக்கப்பட்டு இருந்த 10 ஸ்டால்களில் காட்சிப்படுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  பின்னர் தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடி ஸ்டால்களில் அமைக்கப்பட்டிருந்த அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.  பின்னர் தொழில் முனைவோர் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடையில் பேசினார்.

மார்ச் 23 முதல் 25ம் தேதி வரை தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுவதாகவும் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் இந்தியாவில் சென்னையில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் கடந்த 10 வருடங்களாக தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் கடந்தாண்டு ஐடி துறையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாகவும்,  விவசாயத்தில் ஐடி துறை மூலமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் தமிழ்நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறுவதற்காக இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்தியாவில் அதிகம் தொழில் வளர்ச்சி தேவைப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியடைய வெளிநாடுகளில் உள்ள ஐடி நிறுவன பங்குதாரர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கருத்தரங்க கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

இதையும் படிக்க:  மரணத்தில் சந்தேகம்... உடலை தோண்டி மறு பரிசோதனை!!