அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு தேதி அறிவிப்பு...
ஜூலை 11:
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆகஸ்ட் 17:
பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2:
இதனைத்தொடர்ந்து தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது.
ஓபிஎஸ் மேல்முறையீடு:
பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இரு அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
விசாரணை தேதி அறிவிப்பு:
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வழக்கானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
எதிர்பார்ப்பு:
முன்னதாக, அதிமுக பொதுக்குழு வழக்கில் முதலில் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக ஈபிஎஸ் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் வழக்கில் வெற்றி பெறுவது ஓபிஎஸ்சா அல்லது ஈபிஎஸ்சா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அரசியல் பார்வையாளர்களிடையே வட்டமடித்து வருகிறது. அப்படி ஒருவேளை இந்த வழக்கில் ஈபிஎஸ் வெற்றி பெற்றால், அதன்பிறகு ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் நிலவி வருகிறது.