க்ரைம்

திரிசூலத்தை அதிர வைத்த இரட்டைக்கொலை..! முன்பகைதான் காரணமா? தொடரும் போலீசாரின் தீவிர விசாரணை..

அந்த திமுக பிரமுகரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த இரண்டு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டனரா?

மாலை முரசு செய்தி குழு

பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த மர்மகும்பலால் பரபரப்பு..!

ஏற்கனவே நடைபெற்ற கொலைக்கு பழிக்குப் பலியா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை

சென்னை, பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில், துளசிலிங்க முதலியார் தெருவில் நேற்று இரவு அங்குள்ள ஒரு வீட்டில் இரண்டு வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இளைஞர்களையும் சரமாரியாக கொடூரமாக தாக்கி வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர். செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி, அதனை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த இளைஞர்களின் கொலை குறித்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவர்கள் ஆறு(எ) ஆறுமுகம் (வயது 20) மற்றும் சதிஷ்(17) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்த ஆறு (எ)ஆறுமுகம் என்ற இளைஞருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த திமுக பிரமுகரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த இரண்டு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் இந்த கொலைக்கு காரணமா? என்ற கோணத்தில் பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரட்டைக்கொலை குறித்த சிசிடிவி கட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் திரிசூலத்தில் வீட்டில் தனியாக இருந்த இரண்டு இளைஞர்களான ஆறுமுகம்,மற்றும் சிறுவரான சதீஷ், என்ற இருவரையும் ஆட்டோவில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கொலை செய்து விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தாம்பரம் அருகே பதுங்கி இருந்த கொலைகார கும்பலை பிடித்து தனிப்படைப் போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.