க்ரைம்

நட்சத்திர விடுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... !!

Malaimurasu Seithigal TV

எழும்பூர் நட்சத்திர விடுதியில் நடனம் ஆடும் போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை தட்டிக்கேட்டவர்களுக்கு அடி உதை. 

சென்னை எம்.ஆர்.சி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(30).  இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரமேஷ் தனது நண்பரான தினேஷ் மற்றும் ஒரு பெண் தோழியுடன் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாருக்கு மது அருந்த வந்துள்ளார். 

பின்னர் மூவரும் மது அருந்தி விட்டு பாரில் நடனம் ஆடிய போது, அங்கிருந்த சிலர் பெண் தோழியான இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதை கண்ட ரமேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் அவர்களை தட்டிக்கேட்ட போது, சுமார் 8 நபர்கள் ஒன்றிணைந்து இருவரையும் தாக்கிவிட்டு, மதுபாட்டிலை எடுத்து ரமேஷ் தலையில் தாக்கி உள்ளனர். 

இந்த மோதலில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ரமேஷ் எழும்பூர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கு பேரை பிடித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.