சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தானும் தனது கணவரும் பணிக்குச் சென்ற நேரம் பார்த்து தனது மகனை ஏ.சி மெக்கானிக் வேலைக்கு அழைத்துச் செல்ல வரும் முருகன் என்பவர் தனது 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மகள் வீட்டில் தனியாக இருப்பதைப் பயன்படுத்தி அவரிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதோடு தனது மகளுடன் தொடர்ந்து பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 17 வயதே ஆன தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய முருகன் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் முருகனிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு 3 வருடங்களுக்கு முன் பெரம்பூரைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் மன வருத்தம் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.
தொடர்ந்து முருகனிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.