கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான சுவாமிதாஸ். இவருக்கு திருமணம் நடைபெற்று கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுவாமிதாஸுக்கு அவரது மனைவி கவிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாமிதாஸ் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து இராஜாக்கமங்கலம் அருகே ஆறுதங்கன்விளையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார்.
சுவாமிதாஸ் தங்கையின் கணவர் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், அந்த கடையில் மச்சானுக்கு உதவியாக சுவாமிதாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த (ஜூலை 21) ஆம் தேதி இரவு சுவாமிதாஸ் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுவாமிதாஸை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். சுவாமிதாஸ் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுவாமிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் நேற்று, நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் புதூர் பகுதி சேர்ந்த 33 வயதான ஸ்டாலின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பணத்திற்காக சுவாமிதாஸை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஸ்டாலின் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் சில திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் மர்ம நபர் சொல்லி, ஸ்டாலின் சுவாமிதாஸை கொலை செய்துள்ளார்.
ஸ்டாலின் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “காரணம் தெரியாது கொலை பண்ண சொன்னாங்க பண்ணிட்டேன்” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்டாலினை சிறையில் அடைத்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சொத்து பிரச்சனை அல்லது முன் பகை காரணமாக சுவாமிதாஸ் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் கடையை பூட்டி கொண்டு வீட்டிற்கு சென்ற ஒருவர் மர்ம நபர்களை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.