க்ரைம்

“நள்ளிரவில் சீரழிக்கப்பட்ட மூதாட்டி” - படுக்கையில் ரத்த காயங்களுடன் மீட்பு.. வீட்டில் புகுந்த மர்ம நபர் யார்?

ஆடைகள் கலைந்து, படுக்கையில் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில்...

Mahalakshmi Somasundaram

அந்தியூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கரும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயதுடைய பழனியம்மாள். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் தனித்தனியாக தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் பழனியம்மாள் தனது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பழனியம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியின் வாயை பொத்தி அவரை  பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாக  பழனியம்மாளின் வீட்டை விட்டு வெளியே வரதததால் சந்தேகமடையாக உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.  அப்போது அவர் ஆடைகள் கலைந்து, படுக்கையில் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனை தொடர்ந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர்  போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் கரும்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்