க்ரைம்

இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் தள்ளி சீரழிக்கும் கும்பல்..! வாலிபர் அதிரடியாக கைது!!

இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி அவர்களை விபச்சாரத்தில் தள்ளி சீரழிக்கும் கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்தனர்.

Tamil Selvi Selvakumar

வண்ணாரப்பேட்டை, தங்கச்சாலை மேம்பாலம் அருகே கண்ணன் ரவுண்டானாவில் இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி உள்பட ஒரு சில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் வாலிபரும், உடனிருந்த 2 பெண்களும் போதை மயக்கத்தில் இருப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை செய்த போது மெத்தம்பெட்டமின் என்கிற போதை மாத்திரைகள் மற்றும் எல்.எஸ்.டி. என்ற போதை ஸ்டாம்புகள் இருந்துள்ளது. பின்னர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது, வாலிபர் அண்ணாநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பதும், அந்த 2 பெண்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் பாலசுப்பிரமணி இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி அவர்களை சீரழித்து  விபசாரத்தில் தள்ளியதும் தெரிய வந்தது.

இதையடுத்து பிடிபட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் 2 பெண்களிடமும் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது பிடிபட்ட பாலசுப்பிரமணியன் வடசென்னை பகுதியில் போதை மாத்திரை விற்கும் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். அதுவும் குறிப்பாக இளம்பெண்களை குறி வைத்து அவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து, அவர்கள் போதைக்கு அடிமையானதும் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு அவர்களை விபசாரத்தில் தள்ளி இருப்பது தெரிய வந்தது.

எனவே, பாலசுப்பிரமணியன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருடன் இருந்த 2 இளம்பெண்களையும் மீட்டு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பாலசுப்பிரமணியனுக்கு சென்னையில் போதை மாத்திரை விற்கும் பல்வேறு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்களையும் கூண்டோடு பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் ஏராளமான பெண்கள் பாலசுப்பிரமணியனிடம் சிக்கி சீரழிந்து இருப்பதால், அவர்களை பற்றியும் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.